சனி, 11 அக்டோபர், 2025

எழுத்தாளர் மலரன்னை

மலரன்னை ஓர் ஈழத்து பெண் எழுத்தாளர். மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். 1950 களில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்.1993 ஆம் ஆண்டில் இவரது முதலாவது சிறுகதை வெளியாகியது.அன்றிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது 250 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. " கனவுகள் நனவாகும் " என்ற தொடர்நாடகம் (நாற்பத்தி மூன்று அங்கங்கள் ) ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இவரது 45 இற்கும் மேற்பட்ட தனி ஆக்கங்கள் பல்வேறு திறந்தபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. நான்கு முறை சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சிரித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். "பாலைவனத்துப்புஸ்பங்கள்" என்ற நாவல் தேசிய கலாச்சாரப்பேரவை யின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது . இலக்கிய விவரணம் எழுதுவதிற்கான பிரிவு போட்டியிலும் முதற்பரிசு பெற்றிருக்கிறார். இவரது சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும் , சில கவிதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இலக்கியப்பங்களிப்புக்காக கலைமாமணி, கலாபூசணம், கலைஞானச்சுடர் உள்ளீடாக 15 மேற்பட்ட இலக்கியவிருதுகளை பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள், நாவல் என்பன பல்கலைக்கழக மாணவர்களால் தங்களது கல்விற்காக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் நூல் பின்னல் (knyting, crocheting ), தையல்கலைகளில் சிறந்து விளங்கினார்.இவர் நூல் பின்னல், தையல் கலையை தனது தாயாரிடமிருந்தே கற்றுக்கொண்டார். இவரது மகன் மலரவனும் ஓர் எழுத்தாளர் என்பதும் மலரன்னை அவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம்

கச்சாயில் இரத்தினம் பிரபலமான ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், மற்றும் தொடர் புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர் நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது. இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி, இயக்கி மேடை ஏற்றியுள்ளார். தினகரனில் எழுதிய இவர் எழுதிய "அலைகள்", "விவேகி"யில் எழுதிய 'வன்னியின் செல்வி', 'அன்பு எங்கே?' ஆகிய தொடர் புதினங்கள் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டன[1]. "விடிவு நோக்கி" என்ற தொடர் நாவல் தினகரனில் வெளிவந்தது. இவர் ஆர்மோனியம், புல்லாங்குழல், மௌத் ஓர்கன் வாசிப்பதிலும், திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார். தனது அநேக மேடை நாடகங்களுக்கு அவரே இசையமைத்திருந்தார்.இவர் பட்டம் கட்டும் கலையில் விண்ணனாக இருந்தார். இவரது மகள் மலரன்னை, மலரன்னையின் மகன் மலரவன் ஆகியோரும் சிறந்த எழுத்தாளர்கள் ஆவர்.இவரது மூன்றாவது மகள் அமரர் மங்களேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 1960 களில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் , முறைப்படி வயலின் இசைக்கருவியை பயின்றவர். இவரது ஆக்கங்களை யாழ் பல்கலைக்கழக கலைத்துறை மாணவி ஒருவர் தனது கற்கைக்காக ஆய்வு செய்து சமர்ப்பித்திருந்தார். இவரது இலக்கிய பங்களிப்புக்காக தென்மராட்சியில் இயங்கிய " தேன் தமிழ் மன்றம் " இவரை 1964 ஆம் ஆண்டு கௌரவித்திருந்தது, அப்போதைய மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அவர்களால் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி இக்கௌரவப்பு நடைபெற்றது. இவரது இயற்பெயர் சின்னத்தம்பி இராசரத்தினம் (1910-1996), கச்சாயை பிறப்பிடமாக கொண்டவர். தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் கல்விகற்று மலையகத்தில் பாடசாலை பொறுப்பாசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்று, சுழிபுரத்தில் இயங்கிய பெரிய வர்த்தகநிலையமான துரையப்பா அன் சன்ஸ் என்ற நிறுவனத்தில் பிரதம கணக்கராக பணி புரிந்திருந்தார்.இவரது மனைவியின் பெயர் செல்வசிகாமணி இராசரத்தினம் (1922-2012), இவரும் ஆறு வருடங்கள் மலையக பாடசாலையொன்றில் ஆசிரியராய் கடமையாற்றியவர். பரிசில்கள் இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது. கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார். இவரது பல ஆக்கங்கள் பரிசுபெற்றுள்ளன . வெளியான நூல்கள் பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (தனிக்கதை) (1969) பகுத்தறிவுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்தோட்டை வன்னியின் செல்வி (நாவல்), (1963) ஆசீர்வாதம் புத்தகசாலை, 32. கண்டி வீதி, யாழ்ப்பாணம்

செவ்வாய், 7 அக்டோபர், 2025