சனி, 28 செப்டம்பர், 2013

மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம்


இலங்கையில் இருந்து வெளியான ஆரம்ப சரித்திர நாவலை ( வன்னியின் செல்வி ) எழுதியவர்.எந்தக்கட்சிகளோடோ,எந்த அமைப்புக்களுடனும் தொடர்புபடாமல் எழுதி தள்ளியவர்.எழுத்துகளுடன் மட்டும் நில்லாமல் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பாத்திரம் ஏற்று நடித்து ஆர்மோனியத்துடன் இசை அமைத்து,மேடைக்கான திரைச் சீலைகளை தானே வரைந்து ஒரு சிறந்த கலைஞரானார்.
                                                     தலைமை ஆசிரியர்,மூத்த எழுத்தாளர் என்ற  தகமைகளுடன் பட்டம் கட்டுவதிலும் விற்பன்னராக இருந்தார்.ஐந்து அடிக்கு மேற்பட்ட பட்டங்களை விண்ணுடன் ஏற்றி சுமார் ஏழு எட்டு மைல் தொலைவில் பறக்கவிடும் அழகு தனி அழகு.அயல் ஊர்களில் இருந்தும் இவரிடம் பட்டம் கட்டவருவார்கள் இளையோர்கள்.
                                                    இவரது மூத்த மகள் மலரன்னை  அறியப்பட்ட எழுத்தாளர்.இவரது இளைய மகள் அமரர் மங்களேஸ்வரி 1960 களில் பாடசாலை மட்டத்தில் அகில இலங்கை ரீதியிலான சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.இவரது இரண்டாவது மகன் 1970 களில் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பிரதம பாத்திரங்களில் நடித்தவர்.மெழுகுவர்த்தி என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது மகனும் மேடை நாடகங்களை எழுதி இயக்கி பிரதம பாத்திரத்தில் நடித்தவர் என்பதுடன் இவர் ஒரு சிறந்த பாடகராகவும் திகழ்கிறார்.இவர் "இராகவாணி " என்ற இசைக்குழுவையும் நடாத்தி வருகிறார். இவர் நிகரற்ற பாடகி ஜானகி, வாணி ஜெயராம்  மற்றும் T.K கலா, கல்பனா ஆகியோருடன் இணைந்து மேடை  நிகழ்வுகளில் பாடல்கள் பாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                         ஒப்பற்ற கலைஞனின் வரலாறு அழியாது 
மாறாக அது தொடரும்.
மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்கள் மலையக பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.பின் ஓய்வு பெற்று சுழிபுரத்தில் இயங்கிய துரையப்பா அன் சன்ஸ் என்ற பெரும் வர்த்தக நிலையத்தில் பிரதம கணக்கராய் இருந்தவர்.அதே காலத்திலேயே பல வேறு வர்த்தக நிலையங்களின் கணக்காய்வாளராகவும் இருந்தார். இவரது மனைவி திருமதி செல்வசிகாமணி அவர்கள் மானிப்பாயை சேர்ந்த அமரர் ஓவசியர் கணபதிப்பிள்ளை அவர்களின் இளைய மகள்,  இவர் ஆறு ஆண்டுகள் மலையகப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராய் இருந்தவர் என்பதுடன் கணவனின் எழுத்துக்களின் முதல் வாசகியாகவும் இருந்தார்.
ஒரு பரம்பரையின் மூன்று தலை முறை எழுத்தாளர்கள் ஈழத்தில் ஒரே பரம்பரையில் தோன்றிய வேறு மூன்று தலை முறை எழுத்தாளர்கள் உளரோ தெரியவில்லை. கச்சாயில் இரத்தினம் இலங்கையின் மூத்த எழுத்தாளர் . இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை, இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது. இவற்றுள் தொடர் கதைகளும்,அடங்கும். இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.தொடர் நாடகங்களும் அடங்கும்.இலங்கை தமிழ் வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நிறைவில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வானொலி நாடகங்களின் அதிக பங்களித்தவர்களில் நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி,இயக்கி மேடை ஏற்றியுள்ளார். இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில் முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார்.இவர் ஆர்மோனியம்,புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய்த் திகழ்ந்தார். திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார். பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (சிறுகதைகள்),வன்னியின் செல்வி ( நாவல்) நூலுருப்பெற்றுள்ளன.
இவரது மகளான மலரன்னை அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக பலராலும் அறியப்பட்டுள்ளார்.இவரது எண்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள் ,வானொலிகள் ,சஞ்சிகைகளில் உள்,வெளி நாடுகளில் பிரசுரமாகியுள்ளது. நாற்பதிற்கும்  மேற்பட்ட வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. பத்து ஆங்கிலக்கவிதைகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இவரது பல ஆக்கங்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன.நான்கு  தடவைகள் சர்வதேச அளவில் நடை பெற்ற போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.சித்திரன்,மல்லிகை சிறுகதைப்போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். இவர் ஓவியம்,ஒளிப்படம் முதலிய வற்றிலும் ஈடு பாடு உடையவர். இவர் சில மொழி பெயர்ப்புகளையும் செய்துள்ளார்.
மலரவன் இவன் மலரன்னை அவர்களின் இளைய மகன்.இவன் இப்போது உயிரோடு இல்லை.இவனது நாலு நூல்கள் வெளியாகி பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல் பரிசு பெற்றது. இதுவரை ஐந்து பதிப்புகளை பெற்றுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு) மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்) புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது. பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் வெளியீடு ஆகியிருக்கவில்லை